வெள்ளி, டிசம்பர் 30

சதாம் உசேனும்- பேரழிவு ஆயுதங்களும்


இன்றிலிருந்து(December-30) சரியாய்  ஐந்து வருடங்களுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்ட, ஈராக்கின் 24 ஆண்டுகால அதிபரான சதாம் உசேனை பற்றிய  Interrogating Saddam எனும் நேஷனல் ஜியோகிராபிக்கின் ஆவணப்படத்தை பற்றிய ஒரு பார்வையே இந்த பதிவு.சதாம் உசேன் பிடிக்கப்பட்ட பின்னர் பேரழிவுஆயுதங்கள் குறித்தும்,அல்-குவைதாவுடனான தொடர்பு பற்றியும் நம்மிடம் பேசுவாரா? நமக்கு தேவையான தகவல்கள் அவரிடமிருந்து கிடைக்குமா என தொடங்கும் ஆவணப்படமானதுநடந்த விசாரணையின் 166 நாட்களை பற்றி FBI விசாரணை அதிகாரியான ஜார்ஜ் பைரோ வின் பார்வையில் இருந்து சொல்கிறது.

ஈராக்கில் பேரழிவு ஆயுதங்களும்,அல்-குவைதாவுடன் தொடர்பும் இருப்பதால், அமெரிக்கா மற்றும் உலகிற்க்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் ஈராக்கின் மேல் படையெடுப்பதாய் அண்டபுளுகர் ஜார்ஜ் புஷ் பேசுவதில் இருந்து ஆவணப்படம் வேகமெடுக்க தொடங்குகிறது. அமெரிக்கா ஈராக்கை முழுவதும் ஆக்கிரமித்தபின்னர் பேரழிவு ஆயுதங்கள் எங்கே? என உலகம் அமெரிக்காவை பார்த்து கேட்க்கத்தொடங்குகிறது. ஈராக் மொத்தமும் தேடியும் கிடைக்காத விசயம் இனி சதாமிடமிருந்து வரும் பதில்களில் இருந்து கிடைக்குமென நம்பும் அமெரிக்க அரசு விசாரணைக்கு ஜார்ஜ் பைரோ எனும் நபரை நியமிக்கிறது. இவர் உள்நாட்டு சண்டையால் லெபானானிலிருந்து பன்னிரண்டு வயதில் குடும்பத்துடன் அமெரிக்காவிற்க்கு புலம்பெயர்ந்தவர். பனிரெண்டாயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட அதிகாரிகள் நிரம்பிய FBI லிருந்து அரபி மிகச்சரளமாய் பேசத்தெரிந்த நபர்கள் பனிரென்டு அல்லது பதிமூன்று பேர்தான். இதன் விளைவாகவே இவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது.

முதலில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த சதாம், ஜார்ஜ் பைரோவின் வருகைக்குபின் மெல்ல,மெல்ல பேச ஆரம்பிக்கிறார். பல சமயங்களில் அவர், தான் இன்னும் ஈராக்கின் அதிபர் என்னும் நினைவிலேயே இருக்கிறார், விசாரணையின் போது வரும் சில சிக்கலான கேள்விகளுக்கு தன் உதவியாளர்களை பின்னால் பார்க்கும் பொழுதுதான் அவருக்கு நினைவு வருகிறது தான் ஈராக்கின் அதிபரல்ல,சிறைக்கைதியென்று. ஜார்ஜ் தன் பதவியை குறித்து சதாமிடம் எதுவும் கூறுவதில்லை அதே சமயத்தில் ஜார்ஜ்ஜின் வயது மற்றும் அனுபவத்தை குறித்து சதாமிடமிருந்து எள்ளல் வெளிப்படுகிறது.

விசாரணையின் போது சதாமை எந்த விதத்திலும் தான் சித்தரவதை செய்யவில்லையென்றும், அப்படி செய்வது FBI யின் நடைமுறைக்கு எதிரானது என்றும் குறிப்பிடுகிறார். பார்க்கும் எனக்கோ ஈராக்கின்  அபுகிரைப், குவாந்தனாமோ சிறைச்சாலை சித்ரவதைகள் நினைவுக்குவந்து போகின்றது. பெரும்பாலும் உளவியல் சார்ந்திருக்கும் இந்த விசாரணையை உளவியல் போர் என்றே அமெரிக்க அதிகாரி ஜார்ஜ்பைரோ குறிப்பிடுகிறார். விசாரணை நாட்களின் போது எல்லாவிதமான மனித தொடர்புகளும் சதாம் உசைனுக்கு மறுக்கப்படுகிறது, சதாம் தொடர்பு கொள்ளும் ஒரே நபர் ஜார்ஜ்பைரோ மட்டுமே. தனி அறையில் அடைக்கப்பட்ட வேறெந்த வெளியுலக தொடர்புகளும் இல்லாத சதாமுக்கு முன் இருக்கும் ஒரே வாய்ப்பு ஜார்ஜ் பைரோ மட்டுமே. தினமும் ஐந்திலிருந்து ஏழு மணிநேரம்வரை சதாமிடம், ஜார்ஜ் நேரத்தை செலவிடுகிறார். குர்திஷ் இனப்படுக்கொலை போன்ற சிக்கலான  கேள்விகளுக்கு சதாம் சரியான பதிலேதும் அளிப்பதில்லை. ஆச்சரியப்படத்தக்க வகையில் சதாம் கவிதை எழுதுவதிலும் அந்த கவிதையை விளக்கி பேசுவதிலும் ஆர்வமுடையவராய் இருக்கிறார். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் – The Old man and the sea எனும் கவிதை தொகுப்பு சதாமுக்கு பிடித்தமானது.




சதாம் கைது செய்யப்பட்ட பின்னும் ஈராக்கில் கலவரங்கள் கட்டுக்குள் வருவதில்லை, குண்டுவெடிப்புகள் தொடர்கதையாகிறது. உலகம் மீண்டும் பேரழிவு ஆயுதங்கள் எங்கேயென கேள்வி கேட்கதொடங்குகிறது, இது விசாரணை அதிகாரியின் மீது கூடுதல் அழுத்தமேற்ப்படுத்துகிறது. இதற்க்கிடையில் சிறையில் சதாம் நடத்தும் உண்ணாவிரத போராட்டம், அமெரிக்க தேர்தல், சதாமுக்கு வரும் உடல்நல குறைவு என பல விசயங்கள் நடக்கிறது.நாட்கள் குறைகிறது,மிக குறைவான நேரமே உள்ளது.ஒருநாள் சதாமின் கவிதையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது, ஒருவழியாக அதிகாரி சதாமின் ஆயுதங்கள் குறித்த ஒரு பேச்சை மேற்கோள் காட்டி பேரழிவு ஆயுதங்கள் குறித்து கேட்டுவிடுகிறார். ஈராக்கின் மிகப்பெரிய எதிரி ஈரானென்றும், ஈரானை பற்றிய அச்சத்தினால் சொல்லப்பட்ட ஒரு பொய்யான கதையே பேரழிவு ஆயுதங்கள் என சதாம் சொல்கிறார். இறுதியாக அனைத்து வழிகளிலும்  இப்போது உறுதிசெய்யப்பட்டுவிட்டது "ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லையென்று". இன்னும் கேட்க மிச்சமொரு கேள்வி இருக்கிறது, அது அல்குவைதாவுடனான தொடர்பு. அதையும் கேட்கிறார், இதற்க்கு பதிலளிக்கும் சதாம் "பின்லாடனை மதவாதி என்கிறார்". மதமும்,அரசியலும் ஒன்றோடொன்று கலக்க கூடாதென்றும், தனித்து இருக்க வேண்டியதென்றும் சொல்கிறார். எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது. அல்-குவைதாவுடனான தொடர்பும் இல்லையென்றாகிவிட்டது இரண்டு காரணமும் இல்லையே, அப்புறம் எதுக்குதான்யா? ஈராக் மேல படையெடுத்தீங்கன்னு நமக்கு கேட்க தோன்றுகிறது. அதிகாரிகளோ  இதை கறுப்பு,வெள்ளை மனநிலையில் பார்க்க கூடாதென்றும், சதாமிடம் தொழில்நுட்பம் இருப்பதால் வரும்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் சதாம் ஆயுதம் தயாரிக்ககூடுமென்றும் சொல்கின்றனர். இதனால் ஈராக் மேல் படையெடுத்தது சரி என வாதிடுகிறார்கள். FBIஅதிகாரிகளிடம் வேறு விதமான வார்த்தைகளை நாம் எதிர்பார்க்க முடியாது

166 நாட்டகள் நடந்த நீண்ட விசாரணையின் முடிவில் ஜார்ஜ் விடைபெற்று செல்லும் பொழுது சதாம் மிகவும் நெகிழ்ச்சியாகிவிடுகிறார். சதாம் உணர்வு ரீதியாக விசாரணை அதிகாரியுடன் நெருங்கியதன் விளைவாக சதாமின் கண்களிலிருந்து கண்ணீர் திரள்கிறது. நகைச்சுவையாக சில வார்த்தைகளும் பேசுகிறார். பின்னர் 2006ல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருக்கும் அதிகாரிக்கு தெரியவருகிறது, சதாமை தூக்கிலிட்டுவிட்டனரென்று. அவர் அந்த செய்திக்காக மகிழ்ச்சியடையாமல் புத்தாண்ட்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள செல்வதோடு ஆவணப்படம் முடிவடைகிறது

சதாமின் சர்வாதிகாரம் நிறைந்த காலகட்டங்கள் இந்த படத்தில் இல்லை, அனைத்து அதிகாரங்களையும் இழந்து சிறைக்கைதியாய் இருக்கும் வேளையில்,சதாமின் மனிதத்தன்மை மிகுந்த காட்சிகளே இதில் உண்டு.இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்த பொழுது எனக்கு தோன்றிய கேள்வி இதுதான், "ஆயிரக்கணக்கான குர்திஷ் இன மக்களை கொன்றதற்க்காக சதாம் தூக்கிலிடப்பட்டாரென்றால், அதே மாதிரியான குற்றத்தை ஆயிரக்கணக்கான ஈராக்கியர்கள் மீது நிகழ்த்திய ஜார்ஜ் புஷ்ஷின் கழுத்தின் மீது எப்போது சுருக்கு கயிறு விழும்?"


புதன், டிசம்பர் 14

கருகிய ரொட்டி


இந்த வலைப்பதிவை ஒரு ஜென்கதையோடு துவங்குவது பொருத்தமாய் இருக்கும் என நினைக்கிறேன், நீங்கள் ஏன் வலைப்பதிவு ஆரம்பிக்க கூடாது? என முகநூலில் என்னுடைய நண்பர்கள் கேட்கும்பொழுது (எண்ணிக்கை ஒரு கைவிரலுக்குள்ளே அடக்கம்) இந்த கதையின் மையக்கருத்தை ஒட்டியே அவர்களுக்கு பதிலளித்து கொண்டிருந்த்தேன். இந்த கதை நெடுநாட்களுக்கு முன் படித்தது இருந்தாலும் இன்னமும் என் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது, இந்தளவு முன் அறிமுகம் போதுமானது என நினைக்கிறேன். படிக்கும் நபர்களை அதிகம் வெறுப்பேற்ற விரும்பவில்லை, கதைக்கு செல்வோம்.

ஒரு ஊரில் வசித்து வந்த தம்பதிகளுக்கு பலவருடங்களாய் குழந்தை இல்லாமல் இருந்து, பின்னர் ஒரு குழந்தை பிறந்தது. நாட்கள் நகர்ந்தது குழந்தை வளர வளர அவர்களுக்கு மற்றுமொரு துயரம் நேர்ந்தது, குழந்தை பேசாததே அது. அவர்களும் எத்தனையோ மருத்துவர்களிடம் காட்டியும் பலனில்லை, அனைத்து மருத்துவர்களும் சொல்லிவைத்தார்போல் இவன் உடலில் எந்த குறையும் இல்லை அதே சமயத்தில் இவன் ஏன் பேசவில்லை என்பது புரியாத புதிராகவே இருக்கிறது என்று கூறினர். அந்த தம்பதிகளும் தாங்க முடியாத துயரோத்தோடு நாட்களை கடத்தினர். குழந்தையும் வளர்ந்தான், அதே சமயத்தில் பேசவில்லை. ஒரு நாள் குழந்தையின் தாயார் ரொட்டி சுட்டுகொண்டிருக்கும்பொழுது கவனமின்மையின் காரணமாய் ரொட்டி கருக தொடங்கியது.




அப்பொழுது அருகிலிருந்த குழந்தை பேசத்தொடங்கினான் "அம்மா ரொட்டி கருகிறது"

தாய்க்கோ பயங்கர அதிர்ச்சியும்,ஆச்சரியமும் ஏற்பட்டது. "நீயா பேசியது” என்று கேட்டார்

அதற்கு மகனும் "ஆமம்மா நான் தான் பேசியது ரொட்டி கருகிறது, பாருங்கள்" என்றான்.

"உன்னால் பேசமுடியுமெனில் நீ இத்தனை நாட்களாய் ஏன் பேசாமல் இருந்தாய்" என தாய் கோபத்துடன் கேட்க

மகனோ "இத்தனை நாட்களாய் ரொட்டி கருகவில்லை, இன்றுதான் கருகுகிறது" என்றான்.

இவ்வளவுதான் கதை, இந்த அழகான கதை எல்லாம் சரியாக போய்க்கொண்டிருக்கும்பொழுது எதற்க்காக பேசவேண்டும் என்கிறது,  தேவையற்ற சமயத்தில் பேசாமல் இருப்பது சரிதானே! ஆனால் நமது சமூகத்தில் தினம் தினம் ரொட்டி கருகுகிறது, வலையுலகில் ஏராளமானேர் ரொட்டி கருகுவதை சரியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் கருத்துக்கள் அனைவரையும் சென்றடைந்தாலே போதுமானது, நான் புதிதாக ஏதும் சொல்லத் தேவையில்லை என்பதுதான் என் எண்ணமாயிருந்தது. இருந்தாலும் எழுது,எழுது என்று என் அடிமனதிலிருந்து ஒரு குரல் அடிக்கடி என்னை தொந்தரவு செய்துகொண்டிருந்தது,அதன் பயனே இந்த முதல் பதிவும் இனிவரும் பதிவுகளும்.